இடைக்காட்டார் சித்தம்- 2
பாடல் எண் : 14
சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே
கோபம் என்று சொல்லப்படும் நச்சு பாம்பை அடக்கி ,உள்ளத்திலிருந்து விரட்டி
விட்டால் , சித்தி கிட்டும்.
பாடல் எண் : 15
ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே
ஆசை எனப்படும் பசு இறப்பின் , உலக ரகசியங்கள் கண்டறிவாய் நீ,கோனாரே.
பாடல் எண் : 16
ஓசை உள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே - மூல
ஓங்காரம் கண்டறி நீ தாண்டவக்கோனே
கோனாரே ! நீ இறப்பதற்கு முன் அனைத்துக்கும் மூலமாக இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உண்மையை உணர்ந்து தெளிவடைய வேண்டும்.
பாடல் எண் : 17
மூலப்பகுதி அறத்தாண்டவக்கோனே -உள்ளம்
முளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே
கோனாரே! மாயை என்னும் மூலப்பகுதியை வென்று உள்ளத்தில் வளரும் ஆணவத்தை பிடுங்கி எரிந்து விட வேண்டும்.
பாடல் எண் : 18
சாலக்கடந்தியல்பு தாண்டவக்கோனே-மலச்
சால் என்றே தேர்ந்தறி நீ தாண்டவக்கோனே
உடம்பானது ஓர் பெரிய மண்பாண்டம் போன்றது. அது முழுதும் அழுக்கானது ,நாற்றம் உடையது. இவ்வுடம்பு எக்கணமும் சிதையலாம் என்பதை தெரிந்து கொள்.
பாடல் எண் : 19
பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே -அதைப்
பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
கோனாரே! ஆசைதான் பிறப்புக்கு காரணம். பிறவி நீக்க ஆசை அறு .
பாடல் எண் : 20
சற்றே பிரமத்து இச்சை தாண்டவகோனே - உன்னுள்
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே
கோனாரே! இறைவனை பரம்பொருள் என்றும்,பிரம்மம் என்றும்,சுத்த வெளி என்றும் இடைவிடாது நினைத்து சலிக்காமல் அன்பு செலுத்த வேண்டும்.
பாடல் எண் : 21
அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பக்தி
ஆற்றவர் கதி அடையார் தாண்டவக்கோனே
கோனாரே! வேகவைத்த விதை முளைக்காதது போல பக்தி உள்ளவர்க்கு பிறப்பு ,இறப்பு கிடையா.
பாடல் எண் : 22
செவிதனில் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே
கோனாரே! பிறர் காதில் விழாதவாறு தக்க குரு மூலம் மந்திரங்களை உபதேசம் பெற்று பிறவிப் பயனைப் பெற்றிடு.
பாடல் எண் : 23
மாடும் மலைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
விடும் மணிகளும் வென்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடும் கரைகளும் கல்லாம் பணிபுரியும் கறியும் பரியும்
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே
ஆடுகள், மாடுகள், வீடுகள், சுற்றத்தார், தங்கம், வெள்ளி, வெண்கலம், தோட்டம், வயல், இரத்தின கற்கள், நம் வேலையை நமக்காக செய்யும் யானை, குதிரை, போன்ற விலங்குகள் என நாம் சேர்த்து வைக்கும் எதுவுமே நிரந்தரமில்லை. இதனை உணர்ந்து சுத்த வெளியான இறைவனிடம் சரணாகதி அடைக .அது ஒன்றே நிரந்தரம்.
பாடல் எண் : 24
போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புண்மைபோம்
மோகம்போம் மூர்கம்போம் மோசம்போம் - தாகம்போம்
வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
ஓது பிரமத்து உற்றக்கால்.
நான்கு வேதங்கள் முதலான சைவாகமங்கள் மேலானதென்று பலமுறை ஓது. இறைவனை எண்ணிய கணம் காமம்,பசி,கோபம் உம்மை விட்டகலும்.
பாடல் எண் : 25
ஆயிரத்து எட்டு வட்டமும் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் கண்டேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்.
இறைவனை 1008 மந்திரங்கள் கொண்டு வழிபட்டேன் (சகஸ்ரநாமம்), 108 மந்திரங்கள் கொண்டு வழிபட்டேன் (அஷ்டோத்திரம்), கூர்மையற்ற அறிவுடைய நான் என் சந்தேகம் தீர்ந்து தெளிவுற்றேன்.
பாடல் எண் : 26
அந்தக் கரணம் எனச் சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்த வன்காட்டையும்
சந்ததவம் என்னும் வாளினால் வெட்டினேன்
சாவாது இருந்திடக் கோட்டையும் கட்டினேன்
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் எனும் அந்தக்கரனங்கலாகிய நான்கு விலங்குகளையும் அறியாமை என்ற இருண்ட கொடிய காட்டையும் ஓசை நயமுள்ள திருவைந்தெழுத்தாகிய நமசிவய மந்திரத்தால் அழித்தேன். இதனால் பிறப்பு இறப்பு இல்லாத திருவைந்தெழுத்து எமக்கு அரணாக அமைந்தது.
Comments
Post a Comment