இடைக்காடர் சித்தம் - 1






ஆதி அந்தம் இல்லாத அனாதியை 
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு - போல 
மோதுறும் படி முப்பொறி ஒத்துறக் 
காதலாகக் கருத்தில் கருதுவோம் .

பொருள் 

துவக்கமும் முடிவும் இல்லாத இறைவனை எண்ணம் -சொல் -செயலால் சேர்ந்து நினைக்கும் போது துன்பம் தரும் தீவினைகள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சுபோல் அழிந்துவிடும். 


மொத்த பாடல்கள் : 130
10 பகுதிகளாக பிரித்து இங்கே வழங்கப்பட்டுள்ளது . அதாவது 1 பகுதியானது 13 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலைத் தொடர்ந்து அதன் விளக்கவுரை தொகுக்கப்பட்டுள்ளது .

பாடல் எண் : 1


எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லா பொருள்களும் எண்ணிய
வல்லாளன் ஆதி பரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே !!!


சர்வ வல்லமை பொருந்திய இறைவன்  இந்த  பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அண்டங்களையும் , கோள்களையும் அனைத்து உயிர்களையும் படைத்தான் என்பதை நீ உணர வேண்டும் , கோனாரே .

பாடல் எண் : 2

வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லை என்று
ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே !!!


வான்மழையைப் போல் அளவற்ற விதத்தில் கருணையை வழங்கும் பரம்பொருளை அண்டாதவர்க்கு வெறுமையே. எனவே பரம்பொருளின் புகழ் பாடி மோட்சம் எய்துவீர் , கோனாரே .

பாடல் எண் : 3

முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பக்தியும் சத்தியும் முத்தியும்
சேராவாகுமே கோனாரே !!!


முத்திப் பேற்றை அடைவதற்கு மூலமான இறைவனை வணங்கி முத்தியடைவதர்க்கு நிலையனவற்றைச் செய்யாக்கால் ,சித்தியும் -புத்தியும்-சத்தியும் -முத்தியும் வந்து சேராதாகும் , கோனாரே .

பாடல் எண் : 4

தொல்லை பிறவியின் சொந்தம் முற்றும்  அறவே
சோம்பல் அற்றுத் தவம் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் உமக்கு
இல்லை என்று எண்ணுவீர் கோனாரே !!!

துன்பம் தரும் பிறவியின் தொடர்பு  முற்றும் நீங்க , சோம்பலின்றி தவம் செய்ய வேண்டும்.இல்லையெனில் இறைவனை சென்றடைய முடியா , கோனாரே .

பாடல் எண் : 5

ஆரணமூலத்தை அன்புடனே
பரமானந்த கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே  சிந்தித்து மெய்ஞானப்
போதத்தை சார்ந்திடும் கோனாரே!!!


பரம்பொருளான இறைவனை அன்புடன் அணுகி அவனது ஆனந்த வடிவத்தைப் பணிவுடன் வணங்கி தியானித்து மெய்ஞ்ஞான அறிவைப் பெற்றிடு,கோனாரே.

பாடல் எண் : 6

காலா காலம் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலார்  பெரியவர் சொன்ன நுண்பொருளை
நோக்கக் காண்பது கோனாரே !!!

காலப் பரிமாணத்திற்கு அப்பாற்பட்ட ஒளி வடிவமாக இருக்கும் இறைவனை , கற்பனையைத் தாண்டிய அற்புதத்தை ,ஞானிகள் தங்களது நூல்களில் எழுதி வைத்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும், கோனாரே.


பாடல் எண் : 7

சொல் அரும் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினால் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
அந்தகம் கிட்டுமே கோனாரே !!!


வார்த்தைகளினால் விளக்க முடியாத உருவமாகவும் அருவமாகவும் இறைவன் இருக்கிறார்.இரவும் பகலும் எப்போதும் இடைவிடாது நமது உள்ளத்தில் நிலைநிறுத்தினால் , அறியாமை உம்மை நெருங்காது கோனாரே.


பாடல் எண் : 8

சூரியன் வாள்பட்ட துய்யபனி கெடும்
தோற்றம் போல் வெல்வினை தூள் படவே
நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே!!!

சூரியனைக் கண்டு விலகும் பனியினைப் போல் நம் தீயபதிவுகள் ,உமையம்மையைத் தனது இடப்பக்கம் வைத்திருக்கும் சிவனின் அடியை மனதினால் போற்ற விலகும் ,கோனாரே . 

பாடல் எண் : 9

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!!!


ஆணவம் ,கர்வம், மாயை  என்ற மூன்று பதிவுகளை நீக்கும் விதமாக எண்ணம்,சொல்,செயல் ஆகியவற்றால் உணரமுடியாத மூன்று வெற்றிடங்கள் உள்ளன . அதைப் போதப்பாழ் ,சீவப்பாழ், சிவப்பாழ் எனக் கூறுவர் .ஆடுகளை மேய்த்து வரும் நீ எப்போதும் இறைவனை மனதினால் நினைத்து கொண்டிரு கோனாரே.

பாடல் எண் : 10

பஞ்சு விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்று நின்றதை பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்து கொள்வீர் கோனாரே!!!


கோனாரே! காற்றினால் தூக்கி எறியப்படும் பஞ்சுபோல் உனது மனக்கவலை உன்னை விட்டு அகல பற்றற்ற நிலையிலிருக்கும் பரம்பொருளை இரவும் பகலும் மனதில் வைத்து போற்றி வருவாயாக .

பாடல் எண் : 11

சீரார் சிவன் கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாரா திவான்பொருளைப் பஞ்சஉரு ஆன தொன்றை
பேரான விண்  ஒளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே!!!

சிறப்புப் பொருந்திய சுத்தவெளியாகிய சிவனை ,தெளிந்த அமுதம் போன்றவனை ,சுத்த தேனைப் போன்ற திகட்டாதவனை, வெட்ட வெளியின் முதற்பொருளாகிய சிவனை பஞ்ச பூத வடிவானவனை ,சோதி வடிவானவனை ,ஆனந்தக் கடலை நேர்மையில் என் உள்ளத்தில் வைத்துப் போற்றுகின்றேன் .


பாடல் எண் : 12

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண் உருவப் பாதியானப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை உள்ளில் வைத்து சாரூபம் சாருவனே!!!


கண்ணின் கருவிழியைப் போல பாதுகாக்க வேண்டிய பரம்பொருளை -கேட்பதை எல்லாம் தருகின்ற கற்பக மரம் போன்றவனை -அனைவரும் விரும்பும் தங்கம் போன்ற மாதொரு பாகனை -பெண்ணின் பாதி உருவம் உடையானை -முழுவதும் விளக்க இயலா பதிபசுபாசம் ஆகிய மூன்று தத்துவங்கள் உள்ளடக்கியவனை -வானமுமாகிய மழை போன்றவனை ஒளி  வடிவானவனை -நெருப்பானவனை-மனதில் வைத்துப் போற்றுகின்றேன்.


பாடல் எண் : 13

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்ததென்று எண்ணோடா தாண்டவக்கோனே !!!


கட்டுக்கடங்காமல் ஆடும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்திவிட்டால் முக்தி கிடைக்கும் என எண்ணிக்கொள் கோனாரே.

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்