ஞானத்தை அடையும் மார்க்கங்கள்

ஞானத்தை அடையும் மார்க்கங்கள்
இறைவனை அடைவதற்கு நமது யோகிகள் பல விதமான முறைகளைக் கூறியுள்ளனர்.
            
ü தாசமார்க்கம்  -(சரியை)- கடவுளிடம் ஆண்டவனும் அவன்  அடியார்போல இருந்து பக்தி செய்வது.

ü  சற்புத்திர மார்க்கம்- (கிரியை)- நண்பர் போல இருந்து இறைவனை நண்பனாக்கி எண்ணி பக்தி செய்வது.
ü  சக மார்க்கம்- (யோகம்)- தகப்பனும் பிள்ளையும் போல இருந்து பக்தி செய்வது.
ü  சன் மார்க்கம்- (ஞானம்)- நீ –நான் என்கிற பேதமின்றி தானே இறைவனாக பாவித்தல்.
இந்நால்வகை முறைகளால் அடையும் முக்திகள்
*      சரியை- சாலோக –இருதய சிதாகாசமாகிய கடவுள் உலகத்தில் வாழ்தல்.
*      கிரியை- சாமீப- கடவுள் சமீபத்தில் வாழ்தல்.
*      யோகம்- சாரூப- கடவுள் உருப்பெற்று வாழ்தல்.
*      ஞானம்- சாயுச்சிய- கடவுளுடன் அத்துவிதமாக வாழ்தல்.

ஞானம் என்னும் வீட்டிற்க்கு சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று முதன்மையான படிகளும், சரியை முதல் ஞானம் வரை ஒவ்வொன்றிற்கும் நான்கு படி நிலைகள் உள்ளன. ஆக 16 படி நிலைகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.

சரியை
1)    சரியையிற் சரியை
Ø  ஆலயங்களுக்கு சென்று சுத்தப்படுத்துதல்-துடைத்து மெழுகுதல்
Ø  தோரணம் நாட்டுதல்
Ø  தூபமிடுதல்
Ø  நந்தவனம் வைத்தல்
Ø  பூக்கொய்தல்
Ø  மாலை தொடுத்தல்
Ø  புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்தல்-நதிகளில் புனித நீராடல்
Ø  ஆலயப் பிரதட்சிணம் செய்தல்
Ø  தோத்திரம் பாடுதல்
Ø  திருக் குளங்களை சுத்தம் செய்தல்
Ø  அடியாரைக் கண்டால் எதிர் சென்று எளியேன் ஏதாவது பணிவிடை செய்ய வேண்டுமா என்று தெரிந்து கொள்வது
2)    சரியையிற் கிரியை
இருதயத்தில் ஒரு இலட்சியம் அமைத்து செயல்படுதல்
3)    சரியையில் யோகம்
இருதயத்தில் ஒரு சொரூப பாவனை செய்து அதைத் தியானித்தல்
4)    சரியையில் ஞானம்
அந்த தியான பாவனையின் முதிர்ச்சியடைந்த நிலையில் ஓர் அனுபவ உணர்வு ஏற்பட்டு அதை உணர்ந்து மகிழ்தல்

என்னதான் இதை நீங்கள் முறைப்படி செய்தாலும், செய்வதில் பல விருப்பங்களை உடைய மனதுடையவனால் பலன் காண முடியாது. தனக்குக் கிடைத்ததை மனத் திருப்தியுடன் கடவுளுக்கு எவன் அர்ப்பனம் பண்னுகிறானோ, அவனே சரியைக் குடையவனாகி சாலோக பதவியை அடைவன்.

கிரியை
5)    கிரியையிற் சரியை
பூசைக்கு தேவையான உபகரணங்களைச் செய்து கொள்ளுதல்.
6)    கிரியையிற் கிரியை
சிற்சக்தி-பராசக்தி-இச்சா சக்தி- ஞான சக்தி-கிரியா சக்தி என்கிற ஐந்து சக்திகளின் முன்னிலையில் சிவலிங்க வடிவில் செய்யும் பூசையாகும்.
7)    கிரியையில் யோகம்
மனதினுள்ளே பூசை,ஓமம், தியானம் என்கிற மூன்றுக்கும் மூன்று இடத்தைப் பிரித்துக் கொண்டு செய்யும் மானச யாகமாகும்.
8)    கிரியையில் ஞானம்
அப்படி மானசீகமாக செய்துவரும் போது ஏற்படும் ஒரு அனுபவத்தின் உணர்வாகும். 

எவன் ஒருவன் நிஷ்காமிய மனதுடன் ஆராதனை செய்கிறானோ, அவனே கிரியா பூசையில் சிறந்தவனாகி கடவுளுக்கு சமீபத்திய சாமீப நிலையினை அடையலாம்.

யோகம்
9)    யோகத்தில் சரியை
இயமம்- நியமம்-ஆசனம்- பிராணயாமம் முதலியவற்றை செயல்படுத்தி பஞ்சேந்திரியங்களை (வாய்,கால்,குதம்,கை மற்றும் பாலுறுப்பு) ஒடுக்கி-இலேசாக- பூதகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வாயுவை நிறுத்தி கும்பகம் செய்து பிராணவாயுவை சுழுமுனையில் நிறுத்தி தனது உடலினுள்ளே ஆறு ஆதாரங்களையும், அவற்றின் பத்ம தள அதிபதிகளையும், அவர்களின் அட்சாங்கங்களையும் உணர்ந்து, தியானம் செய்து, மூலாதாரத்தில் அக்னியை ஜொலிக்கச் செய்து, நாபிப் பிரதேசத்தில் குண்டலினி சக்தி வடிவமாயிருக்கும் அமுத தாரையை உருகச் செய்து, மற்ற ஆதாரச் சக்கரங்களின் தலைகீழான பத்மங்களைச் செயல்பட வைத்து, மேல் மார்க்கத்தில் சென்று விந்து தானத்தின் வழியே இறங்கிப் பெருகுகின்ற அமுத தாரையைச் சரீரமெங்கும் நிறைத்து- நனையச் செய்து, நீக்கமற நிறைந்த சுயம்பிரகாசத்தைத் தியானிப்பது முதலிய அட்டாங்க யோகத்தை பந்த பாசங்கள் அற்றுப் போகும் படி செயல்பட்டு சாதனை செய்தலாகும்.
10) யோகத்தில் கிரியை
யோகத்தில் கிரியை என்பது பிரத்தியாகாரம் ,தாரணை என்பவையாகும்.
11) யோகத்தில் யோகம்
யோகத்தில் யோகம் என்பது தியானத்தினைக் குறிக்கிறது
12) யோகத்தில் ஞானம்
தியானத்தின் உச்சகட்ட நிலையில் தோன்றும் மகிழ்ச்சி- நாதம் உணர்தல்.

அட்டாங்க யோக விதிப்படி எவன் தனது தியான சமாதியில் வைத்திருக்கிற சித்தம் வேறுபட்டு அலையாமல் பரிசுத்த்த்துடன் அங்கு நிலைபெற்றதே சாட்சாத்காரம் என்று உண்மையாக்க் கருதுகின்றானோ, அவனே பரமயோகி என்னும் கடவுள் தன்மை உடையவனாகி சாரூப பதவியை அடைவன்.

ஞானம்
13) ஞானத்தில் சரியை
ஆசாரியனிடம் உபதேசம் பெறுவது
14) ஞானத்தில் கிரியை
அப்படிக் கேட்டதைச் சிந்தித்தல்
15) ஞானத்தில் யோகம்
அந்த உபதேசத்தை தெளிவாகப் புரிதல்
16) ஞானத்தில் ஞானம்
தெளிந்த பின் நிட்டை கூடுதலாகும்.

சகலமும் பிரம்மமயமாகக் கருதி சுய அனுபவத்தால் நோக்குகின்ற ஆத்மஞானி, பிராரத்துவ வசத்தில் அணுவளவும் பேதமில்லாமல் சுய அனுபவமாகப் பிரகாசிக்கின்ற மனதுடன் விளங்குவாரானால் அவரே மேன்மையான பரமஞானியாகி சாயுச்சிய பதவியை அடைவர்.

ஓம் நமசிவய





       

Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்