இடைக்காடர் சித்தம் - 3
பாடல் எண் : 27
மெய்வாய் கண் மூக்குச் செவி எனும் ஐந்தாட்டை
முருகு சுவை ஒளி ஊறு ஓசை யாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோகவேளிக்குள்ளே.
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய ஆட்டை ;ஊறு , சுவை, ஓளி, நாற்றம்,ஓசை (அதன் ஐந்து செயல்களையும்) எனும் காட்டை அடையாமல் ஓட்டினேன்.வாட்டினேன் . வெட்ட வெளியாம் சிவத்தினுள்ளே , யோகதினுள்ளே ஐம்பொறிகளையும் கட்டுபடுத்தி,மனத்தை ஓட்டினேன்.
பாடல் எண் : 28
பற்றிரெண்டும் அறப்பண்புற்றேன் நன்புற்றென்
பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கள் கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன்
நல்லது, கெட்டது என்ற பற்றினை அறுத்துவிட்டேன். கள்ளைப் போன்ற ஞானப் பாலையும் அருந்தினேன்.இதனால் ஏன் புலன்கள் சிற்றின்பம் நீக்கி,மற்றின்பம் ( வெட்ட வெளி இன்பம்) நோக்க,சமாதி நிலையிலே சுத்த வெளியாகிய யோக வெளிக்குள் இணைந்துவிட்டேன்.
பாடல் எண் : 29
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுது உண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே எண்ணேன்
விண்ணாளும் மொழியே மேவிப் பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றிவேறே ஒன்றை நண்ணேன்.
உள்நாக்கில் சுரக்கும் அமுரி எனும் அமிர்தத்தை அருந்த மாட்டேன். புருவ மத்தியில் கருத்தை வைக்க மாட்டேன்.விண்ணாளும் மொழியாம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட மாட்டேன்.ஆனாலும் உண்மையான ஞானநெறியில் நின்று நான் முக்தியடைவேன்.
பாடல் எண் : 30
மண் ஆதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே.
பஞ்ச பூதங்களின் தன்மைகளை அறிந்தேன்.என் பொய்யான கவலைகளை எல்லாம் உங்களிடம் வெளிப்படுத்திவிட்டேன்.ஓம் எனும் பிரணவ மந்திரத்தை என் உடம்பினுள் கண்டுற்றேன்.இனி இவ்வுலக வாழ்வை பெரிதாக எண்ணேன் (எண்ண மாட்டேன்).
பாடல் எண் :31
வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்று ஐந்தியோக நோக்கம் புரிந்தேனே.
வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்களையும் நான் ஒழுங்காய் அறிந்தேன்.மாயையுடன் தொடர்புடைய ஐந்து இடர்பாடுகளையும் நீக்கிவிட்டேன். கடினமான ஐந்து யோகங்களையும் கற்றுத் தெளிந்தேன். இவற்றை எல்லாம் விட வாய்பேசாத மௌனமே சிறந்த யோகம் என்பதை உணர்ந்தேனே.
பாடல் எண் :32
ஆறு ஆதாரத் தெய்வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்ட ஆனந்தத்தில் கூடு
கோசம் ஐந்தும் உண்டு குன்றேறி ஆடு.
உடம்பினுள் இருக்கும் ஆறு ஆதாரங்களை காண் .அதற்கும் மேலான பரம்பொருளைத் தேடு. உன்னை போர்த்தியிருக்கும் ஐந்து உடம்புகளுக்கும் மேலானது ஆன்மா. இவை ஆன்மாவை மறைக்கும் போர்வை போன்றவை. இவற்றை எல்லாம் தாண்டி சகஸ்ராரம் எனும் தலை உச்சியின் மீது அமர்ந்து தவம் செய்து ஆனந்தத்தை உணர்ந்துகொள்.
பாடல் எண் : 33
ஆதிபகவனையே
பசுவே
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான்
பசுவே
சொந்தமது ஆகாதோ?
முழுமுதற் பொருளான பரம்பொருளை நீ அன்போடு நினைத்தால் ஒளிமயமான முக்திப்பேறு உனக்குக் கிட்டும்.
பாடல் எண் :34
எங்கும் நின்போருளைப்
பசுவே
எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில்
பசுவே
சந்ததம் சாகுவையே .
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை மனதில் நினைத்து பணிந்தால்,நற்கதி அடைவாய்.
பாடல் எண் :35
அல்லும் பகலும்
பசுவே
ஆதி பதம் தேடல்
புல்லும் மோட்ச நிலை
பசுவே
பூரணம் காண்பாயே.
இரவும் பகலும் நாள்தோறும் பரம்பொருளின் திருவடியைத் தேடு.உயிரே! அப்போது தான் மோட்சம் கிட்டும். முழுமையைக் காணலாம்.
பாடல் எண் :36
ஒன்றைப் பிடித்தர்க்கே
பசுவே
உண்மை வசப்படும்
நின்ற நிலைதனிலே
பசுவே
நேர்மை அறிவாயே .
உயிரே! ஒன்றைப் பிடித்தவர்களுக்கே நின்ற நிலையில் நுட்பமான உணமைகளை அறிய முடியும்.
பாடல் எண் :37
எல்லாம் இருந்தாலும்
பசுவே
ஈசர் அருள் இல்லையேல்
இல்லாத்தன்மை என்றே
பசுவே
எண்ணிப் பணிவாயே .
உயிரே! அனைத்து பொருள்கள் இருந்தாலும் பரம் பொருளின் திருவருள் இல்லையேல் ஒன்றுமில்லாத தன்மை தான் என்பதை உணர்ந்து கொள்.
பாடல் எண் ;38
தேவன் உதவியின்றி
பசுவே
தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம்
பசுவே
அத்தன் திருவடியே .
உயிரே! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்டினால் அது சாதனை தான். ஆனால் அது உன்னால் முடியாது.உயிருக்கு உயிராய் இருப்பதுவே சிவம்.
பாடல் எண் :39
தாயினும் அன்பன் அன்றோ
பசுவே
சத்திக்குள் ளானவன் தான்
நேயம் உடையவர் பால்
பசுவே
நீங்காது இருப்பானே .
உயிரே! ஈன்ற அன்னையின் அன்பைவிட பரம் பொருளின் அன்பு விஞ்சி நிற்கிறது. உயிரே! தூய்மையான அன்புல்லாரிடம் நீங்காது உறைபவன் இறைவன்.
Comments
Post a Comment