இடைக்காடர் சித்தம் - 4
பாடல் எண் :40
முத்திக்கு வித்தானோன்
பசுவே
மூலப்பொருளானோன்
சத்திக்கு உறவானோன்
பசுவே
தன்னைத் துதிப்பாயே.
உயிரே! வீடு பேற்றிற்க்கு காரணமாய் உள்ளவன் பரம்பொருள். அவனே உலகில் அனைத்தும் தோன்ற காரணமானவன். இதுதவிர சக்திக்கும் உறவானவன். உயிரே அத்தகைய பரம்பொருளைத் துதிப்பாயாக.
பாடல் எண் : 41
ஐயன் திருப்பாதம்
பசுவே
அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகள் எல்லாம்
பசுவே
விட்டோடும் கண்டாயே.
உயிரே! முழுமுதற்ப் பொருளான இறைவனின் திருவடிகளை நீ அன்பினால் வணங்கி தொழுது வழிபட்டால் உன்னை துன்புறுத்தும் கொடிய பதிவுகள் உம்மை விட்டகலும்.
பாடல் எண் :42
சந்திரசேகரன் தான்
பசுவே
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான் முதலோர்
பசுவே
ஏவல் புரிவாரே .
உயிரே!சுத்த வெளியாக விளங்கும் சிவனை நீ வணங்கினால் தேவர்களும் விலங்குகளும் நீ சொல்வதைக் கேட்டுப் பணிவர்.
பாடல் எண் :43
கட்புலன் காண ஒண்ணாப்
பசுவே
கர்த்தன் அடியினணை
உட்புலன் கொண்டேத்திப்
பசுவே
உன்னதம் எய்வாயே .
அறிவே! புலனறிவால் சிவனை காண இயலாது. ஆன்மாவின் உள்முகப்பயிற்சியினால் தான் அவனின் திருவடிகளை போற்றி வணங்க முடியும். அப்போது தான் நீ மேன்மை அடைவாய்.
பாடல் எண் :44
சுட்டியும் காண ஒண்ணாப்
பசுவே
சூனியமான வத்தை
ஒட்டிப் பிடிப்பாயேல்
பசுவே
உன்னை நிகர்ப்பவர் யார்.
அறிவே! இன்னது என்று விளக்க முடியாத வெறுமையாக உள்ள பரம்பொருளை நெருக்கமாக பற்றிக்கொண்டால் உன்னைப் போன்ற பாக்யசாலிகள் யாருமில்லை.
பாடல் எண் :45
தன்மனம் தன்னாலே
பசுவே
கர்த்தன் அடியினணை
உட்புலன் கொண்டேத்திப்
பசுவே
உன்னதம் எய்வாயோ .
அறிவே! மனதில் பரம்பொருளை நிறுத்தி வணங்காத மனிதர்கள் ,
பழங்கள் தர முடியாத
ஆண்மரமாக இவ்வுலகில் வாழ்வார்கள்.
பாடல் எண் : 46
சொல் என்னும் நற்பொருளாம்
பசுவே
சோதியைப் போற்றாக்கால்
இல் என்று முத்தி நிலை
பசுவே
எப்பொருளும் சொல்லுமே.
வாக்கு வடிவமாக - பேரொளியாக விளங்கும் பரம் பொருளாகிய சிவனைப் போற்றி வாழாதவர்க்கு வீடுபேறு கிடைக்காது.இது அனைவர்க்கும் தெரிந்தது தானே அறிவே!
பாடல் எண் :47
கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
கண்ணின் கருமணி போன்ற ஒளிவடிவான பரம்பொருளை விண்ணில் இருப்பவனை ஞானம் தருபவனைப் புகழ்ந்து வணங்குங்கள்.
பாடல் எண் : 48
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.
மனம்- சொல்- செயல் என்னும் பொரிக்கு எட்டாத பரம் பொருளாக விளங்கும் கதிரவனை மனத்தின்கண் தொழ வணங்குவாய்.
பாடல் எண் : 49
காலம் மூன்றும் கடந்த கதிரொளியை உள்ளத்தால்
சாலம் இன்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
முக்காலம் கடந்த பரம்பொருளை, உள்ளத்தில் ஆணவமின்றி சோர்வடையாமல் வணங்குங்கள்.
பாடல் எண் :50
பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும்
நூலில் பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே.
பாலில் சுவை மறைந்திருக்கும்.
பழத்தில் இனிப்பு மறைந்திருக்கும்.புத்தகத்தில் பொருள் மறைந்திருக்கும்.
அதுபோல பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும்
பரம்பொருளை வணங்குவோம்.
பாடல் எண் :51
மூவர்முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
மும்மூர்த்திகளின் தலைவனாகிய சிவனை ,முக்கனி போன்றவனை, சர்க்கரை போன்று இனிப்பவனை,அமுதம் போன்று இருக்கும் பரம்பொருளை வணங்குவோம்.
பாடல் எண் : 52
தூய மறைபொருளைச் சுகவாரிதி அமிர்தை
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே.
பரம்பொருள் தூய மறைபொருள் போன்றும்,அமிர்தத்தை போன்றும் இருப்பவன்;இனிப்பவன். அவரின் அருள் பெற போற்றுவீர்.
Comments
Post a Comment