இடைக்காடர் சித்தம் - 4


பாடல் எண் :40

முத்திக்கு வித்தானோன் 
பசுவே 
மூலப்பொருளானோன் 
சத்திக்கு உறவானோன் 
பசுவே 
தன்னைத் துதிப்பாயே.

உயிரே! வீடு பேற்றிற்க்கு காரணமாய் உள்ளவன் பரம்பொருள். அவனே உலகில் அனைத்தும் தோன்ற காரணமானவன்இதுதவிர சக்திக்கும் உறவானவன். உயிரே அத்தகைய பரம்பொருளைத் துதிப்பாயாக.



பாடல் எண் : 41

ஐயன் திருப்பாதம் 
பசுவே 
அன்புற்று நீ பணிந்தால் 
வெய்ய வினைகள் எல்லாம் 
பசுவே 
விட்டோடும் கண்டாயே.

உயிரே! முழுமுதற்ப் பொருளான இறைவனின் திருவடிகளை நீ அன்பினால் வணங்கி தொழுது வழிபட்டால் உன்னை துன்புறுத்தும் கொடிய பதிவுகள் உம்மை விட்டகலும்.


பாடல் எண் :42

சந்திரசேகரன் தான் 
பசுவே 
தாழ்ந்து பணிவாயேல் 
இந்திரன் மான் முதலோர் 
பசுவே 
ஏவல் புரிவாரே .

உயிரே!சுத்த வெளியாக விளங்கும் சிவனை நீ வணங்கினால் தேவர்களும் விலங்குகளும் நீ சொல்வதைக் கேட்டுப் பணிவர்.


பாடல் எண் :43

கட்புலன் காண ஒண்ணாப் 
பசுவே 
கர்த்தன் அடியினணை 
உட்புலன் கொண்டேத்திப் 
பசுவே 
உன்னதம் எய்வாயே .

அறிவே! புலனறிவால் சிவனை காண இயலாது. ஆன்மாவின் உள்முகப்பயிற்சியினால் தான் அவனின் திருவடிகளை போற்றி வணங்க முடியும். அப்போது தான் நீ மேன்மை அடைவாய்.


பாடல் எண் :44

சுட்டியும் காண ஒண்ணாப் 
பசுவே 
சூனியமான வத்தை 
ஒட்டிப் பிடிப்பாயேல் 
பசுவே 
உன்னை நிகர்ப்பவர் யார்.

அறிவே! இன்னது என்று விளக்க முடியாத வெறுமையாக உள்ள பரம்பொருளை நெருக்கமாக பற்றிக்கொண்டால் உன்னைப் போன்ற பாக்யசாலிகள் யாருமில்லை.


பாடல் எண் :45

தன்மனம் தன்னாலே 
பசுவே 
கர்த்தன் அடியினணை
உட்புலன் கொண்டேத்திப் 
பசுவே 
உன்னதம் எய்வாயோ .

அறிவே! மனதில் பரம்பொருளை நிறுத்தி வணங்காத மனிதர்கள் , பழங்கள் தர  முடியாத ஆண்மரமாக இவ்வுலகில் வாழ்வார்கள்.


 பாடல் எண் : 46

சொல் என்னும் நற்பொருளாம் 
பசுவே 
சோதியைப் போற்றாக்கால் 
இல் என்று முத்தி நிலை 
பசுவே 
எப்பொருளும் சொல்லுமே.

வாக்கு வடிவமாக - பேரொளியாக விளங்கும் பரம் பொருளாகிய சிவனைப் போற்றி வாழாதவர்க்கு வீடுபேறு கிடைக்காது.இது அனைவர்க்கும் தெரிந்தது தானே அறிவே!


பாடல் எண் :47

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை 
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

கண்ணின் கருமணி போன்ற ஒளிவடிவான பரம்பொருளை விண்ணில் இருப்பவனை ஞானம் தருபவனைப் புகழ்ந்து வணங்குங்கள்.


பாடல் எண் : 48

மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத 
தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.

மனம்- சொல்- செயல் என்னும் பொரிக்கு எட்டாத பரம் பொருளாக விளங்கும் கதிரவனை மனத்தின்கண் தொழ வணங்குவாய்.


பாடல் எண் : 49

காலம் மூன்றும் கடந்த கதிரொளியை உள்ளத்தால் 
சாலம் இன்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.

முக்காலம் கடந்த பரம்பொருளை, உள்ளத்தில் ஆணவமின்றி சோர்வடையாமல் வணங்குங்கள்.


பாடல் எண் :50

பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் 
நூலில் பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே.

பாலில் சுவை மறைந்திருக்கும். பழத்தில் இனிப்பு  மறைந்திருக்கும்.புத்தகத்தில் பொருள் மறைந்திருக்கும். அதுபோல  பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குவோம்.

பாடல் எண் :51

மூவர்முதலை முக்கனியைச் சர்க்கரையைத் 
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.

மும்மூர்த்திகளின் தலைவனாகிய சிவனை ,முக்கனி போன்றவனை, சர்க்கரை போன்று இனிப்பவனை,அமுதம் போன்று இருக்கும் பரம்பொருளை வணங்குவோம்.


பாடல் எண் : 52

தூய மறைபொருளைச் சுகவாரிதி அமிர்தை 
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே.

பரம்பொருள் தூய மறைபொருள் போன்றும்,அமிர்தத்தை போன்றும் இருப்பவன்;இனிப்பவன்அவரின் அருள் பெற போற்றுவீர்.



Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்