இடைக்காடர் சித்தம்- 6


பாடல் எண் ;66

சாகாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வி அன்றோ 
வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கல்மனமே.

பிறப்பு-இறப்பு என்ற வரிசையில் மரணத்தை தவிர்க்க வழிமுறைகளை போதிக்கும் ஞானமே உண்மையான கல்வி.இதை நீ உணர்ந்து கொள்.


பாடல் எண் :67

எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த 
வல்லாளன் தன்னை வகுத்தறி நீ புல்லறிவே .

அற்ப-அறிவுடைய மனிதனே- பிரபஞ்சத்தையும் அதில் உள்ள எல்லாப் பொருளையும் தன் எண்ணப்படி படைத்துள்ளான். அற்ப அறிவுடைய மானிடனே இறைவனை நன்குணர்ந்து கொள்வாயாக.


பாடல் எண் :68

கட்புலனுக்கு எவ்வளவுங் காணாது இருந்தெங்கும் 
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்தறி நீ புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே! பரம்பொருளை எப்படி நோக்கினும் உன் புறக்கண்களால் காண முடியாது.எல்லாவற்றிலும் இறைவன் மறைந்தே இருக்கிறான். இந்த நுட்பத்தை அற்ப அறிவுடைய நீ விரிவாக அறிந்து கொள்.


பாடல் எண் :69

விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும் 
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறி நீ புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! உனக்கு எப்போதும் மரணம் வரலாம் எனவே நீ விழித்திருக்கும் போதே ,நலமுடன் உள்ள போதே,உன் ஆத்மாவை அறிந்து உணர்ந்து தெளிவடைந்துவிடு.


பாடல் எண் :70

மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகிப் 
பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறி நீ புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! உன் உடம்பிலே ஐம்புலன்கள் இருக்கின்றன.மூச்சுக்காற்று நின்றவுடன் ஐம்புலன்கள் செயல்படுவதில்லை.இந்த உண்மையை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.


பாடல் எண் :71

ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே 
கூத்துப்புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே !ஆன்மாவின் அம்சங்களாக உனது உடலில் உறுப்புகள் உள்ளன.அவை பேய் போன்று ஆட்டம் போட்டு உன் தவ வாழ்க்கைக்கு இடையூரு செய்வதை உணர்ந்துகொள்.


பாடல் எண் :72

இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும் உன்தன் வல்லமையை 
அருள்துறையில் நிறுத்தி விளக்காகு நீ புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே !இருட்டுக்கு வெளிச்சம் தரும் விளக்கு போல் -மற்றவரின் அறியாமை என்ற இருளை விரட்டும் திறமை உன்னிடம் உள்ளது.அந்த ஆற்றலை ஆன்மீகத்தில் பயன்படுத்தினால் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.


பாடல் எண் ;73

நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல் 
கொல்வழியில் சென்று குறுகுவதேன் புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! தீயவழியில் சென்றால் நீ கூனிக்குறுகி நிற்க வேண்டிய நிலைமை தான் ஏற்படும் நல்ல வழியில் நாட்டம் கொண்டு சென்றால் முக்திப்பேறு கிட்டும்.


பாடல் எண் :74

கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல 
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவதேன் புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! கையில் விளக்கை ஏந்திக் கொண்டு கடலில் வீழ்வார் போல உண்மையான விளக்கு உன் உள்ளத்தில் இருக்க -கடலில் ஏன் விழுகிறாய்?


பாடல் எண் :75

வாசிக்கு மேலான வான்கதி உன்னுள்ளிருக்க 
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! உன் உயிர் மூச்சை விட சிறந்த இறைவன் உன் உள்ளத்திலே இருக்க -நீ நினைக்கும் முக்திப்பேறு கிடைக்காதா என்ன ?


பாடல் எண் :76

அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும் 
முன்னவனைக் கண்டு முத்திஅடை புல்லறிவே.

அற்ப அறிவுடைய மானிடனே ! உன்னை ஈன்றெடுத்த அன்னையைப்போல் அணைத்து உயிர்களையும் அன்புடன் பாதுகாத்து வரும் முன்னவனாகிய மூலவனை அகக்கண்களால் கண்டு முக்திப்பேற்றை அடையலாம்.


பாடல் எண் :77

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற -பர 
மானந்தம் கண்டோம் என்று தும்பீபற
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீபற -மலை 
மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற 

தவம் செய்ததால் அறியாமை நீங்கியது.பேரின்பம் கிடைத்தது.உண்மையான அறிவு வந்தது.பிரம்மரந்திரம் என்ற உச்சந்தலையில் பரம்பொருளை உணர்ந்தோம்.


பாடல் எண் :78

அல்லல்வலை இல்லை என்றே தும்பீபற -நிறை 
ஆவணங்கள் அற்றோம் என்றே தும்பீபற 
தொல்வினை நீங்கிற்று என்றே தும்பீபற -பரஞ் 
சோதியைக் கண்டோம் எனத்தும்பீபற.

தவம் செய்ததால் பிறப்பு,இறப்பு என்ற துன்பம் அழிந்தது. தான் தனது என்ற அகங்காரம் விலகியது.பழைய வினைகளின் தாக்கம் ஓய்ந்தது. ஒளி வடிவான பரம்பொருளைக் கண்டு கொண்டேன்.





Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்