இடைக்காடர் சித்தம் - 7


பாடல் எண் :79

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற -நிறை 
அருவே பொருளாம் எனத்தும்பீபற 
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற -ஒரு 
தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீபற .



தவம் செய்ததால் ஐந்து பொறிகளின் ஆட்டம் கட்டுக்குள் வந்தது.முழுமுதற் பொருளான பரம்பொருள் என்ற உண்மையை உணரமுடிந்தது.பரம்பொருளின் தன்மைகளை உண்மைகளை  அறிந்துகொள்ள முடிந்தது. தெய்வத்தன்மை என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்றது.

பாடல் எண் :80

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற -பர 
முக்திநிலை சித்தி என்றே தும்பீபற 
தேவாசை வைத்தோம் என்று தும்பீபற -இந்தச் 
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற .


மூவாசைகளை (மண்,பெண்,பொன் ) விட்டு , சித்தி அடைந்தோம். அந்த பரம் பொருளின் மீது பற்று வைத்து பிறவியை ஒழித்தோம் .

பாடல் எண் :81

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற -மாயைப் 
பற்று அற்றோம் என்றே நீ தும்பீபற 
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற -நிறை 
வள்ளல் நிலை சாந்தோமே தும்பீபற .


இவ்வுலகத்தை மறந்து ,வெட்ட வெளியுடன் இணக்கமானோம். வாழ்விடம் சேர்ந்தோம், பரம்பொருளுடன் சேர்ந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி பெற்றோம் 

பாடல் எண் :82

எப்பொரும் கனவு என்றே தும்பீபற - உலகு 
எல்லாம் அழியும் என்றே தும்பீபற 
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீபற - என்றும் 
அழிவில்லாதது ஆதி என்று தும்பீபற .


இவ்வுலக பொருள்களெல்லாம் நிலையற்றது.நீரில் எழுதிய எழுத்துப் போன்றது இந்த உடல். என்றும் அழியாதது பரம்பொருள் என்று உணர்ந்தோம்.

பாடல் எண் :83

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே- கெட்ட 
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே 
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே -நிறை 
சந்தோஷமாகவே கூவு குயிலே.


தவத்தால் கரணங்கள்(மனம், புத்தி, சித்தம்,ஆணவம்) அடங்கின. காமம்-குரோதம்-லோபம்-மோகம்-மதம்-மதாச்சரியம் ஆகியன ஒழிந்தன.பரம்பொருளை அடைய சரியை-கிரியை-யோகம்-ஞானம் பற்றி புரிந்து கொண்டேன்.இவற்றை எல்லாம் மகிழ்ச்சியுடன் உலகிற்கு எடுத்து சொல் குயிலே.

பாடல் எண் :84

உலகம் ஓக்காளமாம் என்று ஓதுகுயிலே-எங்கள் 
உத்தமனைக் காண்பது அரிதென்று ஓதுகுயிலே 
பலமதம் பொய்மையே என்று ஓது குயிலே- எழு 
பலம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே.


இந்த உலகை நினைத்தாலே வாந்தி வருகுரிறது.கடவுளைக் காண்பது  தான்.பல சமயக் கருத்துக்கள் பொய் என்று உலகத்தவரிடம் கூவு குயிலே. ஏழு பாவங்களையும் நாம் செய்யாமல் அகற்றினோம் என்று சொல் குயிலே.

பாடல் எண் :85

சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே -எல்லாத் 
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே 
மாதவங்கள் போலும் வாயா குயிலே -மூல 
மந்திரங்கள் தான் மகிமை வாய்க்கும் குயிலே

பஸ்பங்கள் செய்து சாப்பிடுகிறவர்களும் இறந்து விடுவர்.பல உண்மைகளை புரிந்தவரும் இறப்பர்.பல தவங்கள் செய்தாலும் ஒன்றும் கிட்டாது.மூலமந்திரமான திருவைந்தெழுத்தை ஓதி வந்தால் எல்லாப் பெருமைகளும் வந்து சேரும் 

பாடல் ஏன்:86

எட்டிரண்டு அறிந்தோர்க்கும் இடம் இல்லை குயிலே -மனம் 
ஏகாமல் நிற்கில் கதி எய்தும் குயிலே 
நட்டணையைச்சார்ந்து அறிந்து கொள்ளுகுயிலே -ஆதி 
நாயகனை  நினைவில் வைத்து ஓது குயிலே.


பிரணவத்தின் கூறுகளாக அகரமும் உகரமும் உள்ளன. அகரம் எட்டு என்ற எண்ணைக் குறிக்கும். அகரம் சிவத்தையும்,உகரம் சக்தியையும் குறிக்கும்.சிவசக்தி ஞானம் பெற்றவர்க்குத் தான் துன்பம் கிடையா.மனம் அங்குண் இங்கும் அலையாமல் நின்றால் முக்தி கிட்டும். உலகில் அநியாயம் -கொடுமை இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு எப்போதும் பரம்பொருளையே சிந்தையில் வைத்துக்கொள்.இந்த அறிவுரைகளை எல்லா உலகத்தவர்க்கு எடுத்துச் சொல் குயிலே .

பாடல் எண் :87

ஆடுமயிலே நடமாடுமயிலே -எங்கள் 
ஆதியணி சேனை கண்டு ஆடுமயிலே 
கூடு போகும் முன்னம் கதி கொள்ளுமயிலே என்றும் 
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.

ஆடும் மயிலே! நடமாடும் மயிலே! பாம்பை அணிந்த சிவனைக் கண்டு ஆனந்த நடனமாடு மயிலே. மரணத்திற்கு முன் விரைவாக மௌனத்தில் இருந்து பரம்பொருளை அடைவாயாக மயிலே.

பாடல் எண் :88

இல்லறமே அல்லலாம் என்று ஆடுமயிலே -பத்தி 
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லை மயிலே 
நல்லறமே துறவறம் காணுமயிலே -சுத்த 
நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே.


இல்லறத்தை விட துறவறமே சிறந்தது என்று ஆடுமயிலே.பக்தி இல்லையேல் முக்தி இல்லை.துறவறமே நல்லறம். ஓசையின் இருப்பிடமாகிய வெட்ட வெளியில் தவம் செய் மயிலே.

பாடல் எண் :89

கல்தூனைப்போல் மனத்தைக் காட்டுமயிலே-வரும் 
காலனையும் தூரத்தில் ஒட்டு மயிலே 
பற்று ஊடுருவவே பாயுமயிலே அகப் 
பற்றுச் சற்றும் இல்லாமல் பண்ணு மயிலே.


கல்தூணைப் போல் உன் மனம் அசையாமல்-அலைபாயாமல் உறுதியாக நிற்கட்டும்.இதனால் இறப்பு பிறப்பு என்ற பிறவிக்கடலை கடக்கலாம். உனது உலகப் பற்றுகளை -புதைத்து விடு. நான் என்ற தன முனைப்பையும் ஒழித்துவிடு.

பாடல் எண் :90

சிறுதவளைதான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும் 
மறுவாயைத்தான் கலக்கி மதி மயங்கும் மடவனமே.


மட அன்னமே! குளத்தில் தண்ணீர் அசைவற்று இருக்கிறது. அப்போது வானம்கூட அதில் தெரியும். அதில் சிறிய தவளை குதித்து நீரைக் கலக்கி விட்டால் -வானத்தின் காட்சி தெரியாது. அது போல குற்றமுள்ள வெட்டிப் பேச்சினால் உனது சிந்தனை தடுமாறும் .

பாடல் எண் :91

காற்றில் மரமுறியும் காட்சியைப் போல் நல்லறிவு 
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே.


மட அன்னமே! காற்று நன்றாக வீசும்போது மரங்கள் முறிந்து விழலாம். அதைப்போல் மெய்ஞானம் என்ற காற்று வீசும்போது அறியாமை என்ற மரங்கள் விழுந்து விடும்.



Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்