இடைக்காடர் சித்தம் - 5


பாடல் எண் :53

சராசரத்தைத் தந்த தணிவான மூலம் என்னும் 
பராபரத்தைப் பற்றிப் பவம் அறவே போற்றீரே.

பிறப்பு நீங்க, சுத்த வெளியில் தனியாக இருந்து பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளைப் போற்றி வணங்குவோம்.



பாடல் எண் :54

மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக் 
கண்ணாரக் காணக் கருத்து இசைந்து போற்றீரே.

இன்பக்கடலாகவும் -அமிர்தமாகவும் மறைந்திருக்கும் பரம் பொருளின் அருளைப்பெற -அவனைப் பாசத்துடன் வணங்குங்கள்.


பாடல் எண் :55

பொய்ப்பொருளை விட்டுப் பலமறிய ஒண்ணாத 
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்று போற்றீரே.

நிலையற்ற மாறக்கூடிய உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றினை அறுத்துவிட்டு,புலன்களால் அறிய முடியாத பரம்பொருளை நாள்தோறும் விருப்பமுடன் வணங்குவோம்.


பாடல் எண் :56

எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை 
உள்ளில் துதித்து உணர்வடைந்து போற்றீரே.

எள்ளில் எண்ணெய்  இருப்பது போல , எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் வைத்து அவன் பெருமையை வணங்குவோம்.


பாடல் எண் :57

பூமியெல்லாம் ஓர் குடைக்கீழ் பொருந்த அரசாளுதற்குக் 
காமியம் வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே.

கல் மனமே! உலகெங்கும் ஒரு குடையின் கீழ் அரசாள்வதற்கு விருப்பம் வைத்தால் ,உனக்கு முக்தியில்லை.


பாடல் எண் :58

பெண்ணாசை கொண்டு பேணித் திரிந்தக்கால் 
விண்ணாசை வைக்க விதியிலையே கல்மனமே.

கல் மனமே! பெண்ணாசை கொண்டு திரிந்தால்-பரம்பொருளின் மீது ஆசை வைக்க உனக்கு பிராப்தம் கிடையாது.


பாடல் எண் : 59

மேயும் பொறிகடமை மேலிட ஒட்டார்க்கு வினை 
தேயும் என்றே நல்வழியில் செல்லு நீ கல்மனமே .

ஐம்பொறிகள் தீயவைபால் செல்லும். அவற்றை நன்மையின் பக்கம் திருப்பு.அங்கனம் உன்னுடைய வினைப் பதிவுகள் அழியும்.


பாடல் எண் :60

பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால் 
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே.

கல் மனமே! பொருளாசைக் கொண்டு உலகெல்லாம் அலைபவருக்கு முக்தி கிட்டாது.


பாடல் எண் :61

பொய்யா கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல் 
மெய்யான ஞானக் கல்வி விரும்புவர் கல்மனமே.

கல் மனமே! பொய்யான கல்வியைக் கற்றுக் குழம்பாமல் பரம்பொருளைப் பற்றிய உண்மைக் கல்வியை விரும்புவாய்.


பாடல் எண் :62

பேய்க்குரங்கு போல பேருலகில் இச்சை வைத்து 
நாய்நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே.

கல் மனமே! பேய் குரங்கின் மனம் போல உலக பற்று கொண்டு, நாய் நரிகள் போல அங்கும் இங்கும் அலைந்தால் நன்மை உண்டாகாது 


பாடல் எண் :63

இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கையோடு பலபொருளை 
விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே.

கல் மனமே! காந்தம் இரும்பை இழுப்பது போல் -மனமானது-பலபோருல்களை விரும்பும். அவை எல்லாம் நிலையானவை இல்லை என்பதை உணர்ந்து கொள்.


பாடல் எண் : 64

கற்ப நிலையால் அலவோ கற்பகாலம் கடத்தல் 
சொற்பநிலை மற்றநிலை சூட்சம் காண் கல்மனமே.

கல் மனமே! கற்ப மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் சிறுது காலம் அதிகமாக வாழலாம். ஆனால் அதைவிட பெரிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றின் நுணுக்கத்தை நீ அறிந்து தெளிவு பெற வேண்டும்.


பாடல் எண் :65

தேகம் இழப்பதர்க்குச் செபம் செய்தென் தவம் செய்தென் 
போகம் மட்டும் செய்தால் என் யோசிப்பாய் கல்மனமே.

கல் மனமே! உடல்பற்றை விடுவதற்கு ஜபம் -தவம்-யோகம்  செய்தால் போதாது. ஞானம் மட்டுமே உதவும் .



Comments

Popular posts from this blog

திருமூலரின் அணு ஞானம்

சிவவாக்கியர் பாடல் (தமிழில் வரிகளுடன்)

குதம்பைச் சித்தர் பாடல்கள்